சென்னையிலிருந்து கத்தாருக்கு `மெத்தாம்பிடமைன்’ என்ற போதைப் பொருளை அனுப்பிய நைஜீரிய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு கூரியர் சர்வீஸ் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் சோதனை செய்யப்பட்டது.
அப்போது 5.9.2018ல் சென்னையில் இருந்து கத்தார் நாட்டின் தோகா நகரத்துக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்று சென்னை விமான நிலைய கார்கோவுக்கு திரும்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பார்சலை யாரும் திரும்பபெறவில்லை. சிறிய வகை மிஷின் என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்தப் பார்சலை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர்.
அப்போது உள்ளே 200 கிராம் எடையுள்ள ‘மெத்தாம்பிடமைன்’ என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு பல லட்சம் ரூபாயாகும்.
சென்னையில் இருந்து கத்தாருக்கு அனுப்பிய நபர் குறித்து பொலிசார் விசாரித்தனர்.
அப்போது நைஜீரிய வாலிபர் பிளமன்தாமஸ், பார்சலை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பார்சல் அலுவலகத்துக்கு வரும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
அதன் பேரில் பொலிசார் நடத்திய விசாரணையில் சென்னை மேடவாக்கத்தில் பிளமன்தாமஸ் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல நாள்களாக அவர் சென்னையிலிருந்து போதைப்பொருள்களை கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பியது தெரியவந்தது.
டெல்லியில் இருந்து போதைப்பொருள்களை அவரது கூட்டாளியான இன்னொரு நைஜீரிய நபர் ரகசியமாக அனுப்பி வைப்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
இதையடுத்து டெல்லி வாலிபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.